தமிழ்நாட்டை குழப்புவதற்காகவே ஒரு கவர்னர் வந்திருக்கிறார் - வைகோ காட்டம்..
தமிழ்நாட்டை குழப்புவதற்காகவே ஒரு கவர்னர் வந்திருக்கிறார்; அவரைப் போன்றவர்கள் தேவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ ஒரு வருடம் கொரோனா இருந்ததால் வரவில்லை. மூன்று வருடம் நான் சிறைச்சாலையில் இருந்ததனால் வரவில்லை. 46 வருடம் தொடர்ந்து வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளேன். அவர் கடைப்பிடித்த ஒழுக்கம்; சொல் ஒன்று செயலொன்று இல்லை என்ற அந்த இலக்கணம், அப்படிப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க; என்று சொல்லி அவருக்கு ஆண்டுதோறும் இங்கே வந்து மலர் அஞ்சலி செலுத்துகிறோம். அவர் பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒரே நாள் என்பது தேவர் ஜெயந்தியின் சிறப்பு .
தேவர் புகழ் வாழ்க.. எல்லா சமுதாயங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; சகோதரத்துவத்தை பேண வேண்டும்; சாதி மதத்துக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை குழப்புவதற்காகவே ஒரு கவர்னர் வந்திருக்கிறார். அவர் அபாண்டமாக அவதூறாக பேசுகிறார். அவரைப் போன்றவர்கள் தேவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.