காதலி பேச மறுத்ததால் கழுத்தை அறுத்த காதலன்! திருச்செந்தூரில் பரபரப்பு

 
suicide

திருச்செந்தூர் அருகே காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகள் வனசந்தியா(20). இவர் உடன்குடி அருகில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த பாண்டியன் மகன் கார்த்திக்(21) ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் வனசந்தியாவின் தந்தைக்கு தெரியவந்துள்ளது. இதனால் மகளை  அவர் கண்டித்துள்ளார். 

இதையடுத்து, வனசந்தியா கார்த்திக்கிடம் கடந்த ஒரு மாதமாக பேசுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், கார்த்திக்  தன் காதலி வனசந்தியாவை  சந்திக்க அவரது வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த வனசந்தியாவிடம், தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு வனசந்தியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வனசந்தியா கழுத்தை அறுத்துவிட்டு சென்றுவிட்டார். இதில் பலத்த காயமடைந்த வனசந்தியா வலி தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதற்கிடையே வீட்டுக்கு சென்ற கார்த்திக் வீட்டில் உள்ள அறையை பூட்டிவிட்டு மின்விசிறியில் கயிற்றால் தூக்கு  போட்டுள்ளார். 

இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக கார்த்திக்கை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.