‘என் உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுங்க’... 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை

 
suicide

தாம்பரம் அருகே 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம் போலீசிடம் சிக்கியது.

suicide

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரனை வேல் நகர் பகுதியை சேர்ந்தவர் கலாவதி(47). சேலையூரில் உள்ள மருத்துவமனையில் துப்புரவு பணி செய்து வருகிறார். இவருடைய மகன் யோஸ்வா(14), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் யோஸ்வா பள்ளியில் சக மாணவர்களுடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல் தனது மகன் யோஸ்வா பள்ளிக்கு அனுப்பி வைத்த கலாவதி பணிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளியில் மீண்டும் ஜோஸ்வா தகராறில் ஈடுபட்டதாகவும், ஆசிரியர் ஒருவர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த சிறுவன் பள்ளியில் இருந்து பாதியிலேயே வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்பு கலாவதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆசிரியர் யோஸ்வா மீண்டும் மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதனை தாங்கள் கண்டித்தாகவும் அதற்காக தலைமை ஆசிரியரை பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து இரவு பணியை முடித்துவிட்டு கலாவதி வீட்டிற்கு சென்று வெகு நேரமாக கதவை தட்டியும் யோஸ்வா திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் புடைவையால் யோஸ்வா தூக்கில் தொங்கிய படி இருப்பதை கண்டு அதிர்ச்சியடந்தார். உடனடியாக சிறுவனை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த பீர்க்கன்காரனை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சிறுவன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைபற்றி உள்ளனர். அதில் தான் இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். மேலும் ஜோஸ்வா குறித்து பள்ளியில் இருந்து அவரது தாய் கலாவதிக்கு எந்த தகவல் அளிக்கவில்லை என்றும் உண்மையான காரணத்தை போலீசார் மறுத்து வருவதாகவும் அதனால் உண்மையான காரணம் தெரியும் வரை சிறுவன் உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.


....