9வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.. தற்போது வரையிலான முன்னிலை நிலவரம் இதோ..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 9 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னிலை விவரங்கள் வெளியான வண்ணம் உள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வெற்றி முகம் காணப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடந்து முடிந்தநிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஈரோடு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகளும், 398 தபால் வாக்குகளும் பெறப்பட்டுள்ளன. சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் 8 சுற்றுகள் நிறைவடைந்திருக்கிறது.
முன்னதாக 8வது சுற்று தொடக்கத்தின்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை, உணவு இடைவேளை காரணமாக நிறுத்தப்பட்டது. 45 நிமிட உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகல் 1.45 மணிக்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றிருக்கிறது. 8 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 61,125 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 22,587 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா5,044 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 734 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஈரோடு இடைத்தேர்தலில் 6 சுற்றுகள் முடிவில் 264 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். தற்போது 9வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சராசரியாக ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்க அரை மணி நேரம் ஆவது குறிப்பிடத்தக்கது.