நம் நாட்டுக்கு வரவேண்டிய 9 கப்பல்கள் நடுவழியில் ஸ்டக்! 198 இந்திய மாலுமிகளின் நிலை என்ன?

 
1

ஈரான் - அமெரிக்கா இடையே அண்மையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், அப்பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மந்தமடைந்துள்ளது.இந்தச் சூழலில், கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி., யுடன் நம் நாடு நோக்கி புறப்பட்ட ஒன்பது இந்திய எண்ணெய் கப்பல்கள், 198 மாலுமிகளுடன் ஹார்முஸ் ஜலசந்தி அருகே காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது.இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:சர்வதேச கடல் வழித்தடங்களில் வணிகக் கப்பல்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சமீபத்திய தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். 

அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து, பதற்றத்தை தணிக்க வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்பு, சர்வதேச கடல் போக்குவரத்து, எரிபொருள் வினியோகம் மற்றும் உலக வர்த்தக ஓட்டம் தடையின்றி தொடர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மோதலுக்கு அமைதியான மற்றும் நிரந்தர தீர்வு காண, சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு திரும்ப வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதமும், எல்.என்.ஜி., எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியில் 60 சதவீதமும், எல்.பி.ஜி., எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு இறக்குமதியில் 90 சதவீதமும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.மேற்காசிய பகுதியில் பதற்றம் நீடித்தாலும், இதுவரை சுமார் 50 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து நம் நாட்டை வந்தடைந்துள்ளன. எனினும், பாதுகாப்பு அச்சம் காரணமாக மேற்காசிய நாடுகளில் இருந்து எரிபொருள் கொள்முதல் முழு அளவில் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனால் இறக்குமதி அளவு வழக்கத்தை விட குறைவாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.