சென்னையில் ரகசிய இடத்தில் மறைத்து வைத்திருந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 சிலைகள் மீட்பு

 
statue

ரகசிய இடத்தில் மறைத்து வைத்திருந்த 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த 9 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.

statue

சென்னை பிராட்வே பிடாரியார் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பழமைவாய்ந்த சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பமீலா இம்மானுவேல் என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, பழமைவாய்ந்த தட்சிணாமூர்த்தி சிலை ஒன்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வீட்டில் தீவிரமாக தேடிய போது பழமைவாய்ந்த 8 சிலைகள் ரகசிய இடத்தில் மறைத்து வைத்திருந்ததை  போலீசார் கண்டுபிடித்தனர்.  9 சிலைகளுக்குண்டான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை பறிமுதல் செய்தனர். 

சட்டவிரோதமாக சிலைகள் வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் பமீலாவிடம் நடத்திய விசாரணையில், அவரது கணவரான இம்மானுவேல் பினீரோ என்பவர் பழங்கால சிலைகளை வெளிநாட்டில்  விற்கும் தொழில் செய்து வந்ததாகவும், கடந்த 2001ஆம் ஆண்டு இம்மானுவேல் இறந்த பிறகு, அவர் கடத்த வைத்திருந்த 9 சிலைகள் வீட்டிலேயே மறைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து சிலைகள் கடத்தப்பட்டது குறித்தும், எந்த கோவிலுக்கு சொந்தமான சிலைகள் எனவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  பறிமுதல் செய்யப்பட்ட 9 சிலைகளில் 7 சிலைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவை எனவும் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என சிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.