திடீரென போடப்பட்ட பிரேக்... ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்து 9 மாத குழந்தை பலி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பேருந்து பயணம் செய்த பொழுது ஓடும் பேருந்தில் இருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் முத்தம்பள்ளி கங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை- முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தையும் 9 மாத நரணிஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் கோவையில் உள்ள ஒலம்பஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து கொண்டு கட்டிட கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது குடும்பத்தினருடன் திருவிழாவிற்காக தங்களது சொந்த ஊருக்கு சென்ற அவர்கள் நேற்று இரவு மீண்டும் கோவை செல்வதற்காக சேலத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பேருந்தில் இரவு பயணம் செய்துள்ளனர். சுமார் இரவு பத்து முப்பது மணி அளவில் சேலம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் பயணம் செய்த ராஜதுரை மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்து வந்துள்ளனர். அப்பொழுது அரசு பேருந்தின் முன் பக்க கதவு திறந்து இருந்ததால் கதவை சாத்தி வைக்க நடத்துனரிடம் தெரிவித்தும் நடத்துனர் அஜாக்கிரதையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் பேருந்து சங்ககிரி அருகே உள்ள கத்தேரி வளையக்காரனூர் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் ராஜதுரை இடது தோளில் இருந்த அவரது மகன் நரனேஸ் ராஜதுரை பிடியிலிருந்து நழுவி கீழே விழுந்து பேருந்தை விட்டு சாலையில் விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தபோது ரத்த காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி துடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தேவர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து ஓடும் பேருந்து இருந்து குழந்தை விழுந்ததின் காரணம் என்ன என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


