9 எலுமிச்சை பழங்கள் ரூ.1.43 லட்சத்திற்கு ஏலம்..!

 
1

விழுப்புரம் மாவட்டத்தில் ஒட்டனந்தல் ரத்தினவேல் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழா விமர்சையாக நிறைவடைந்தது.இந்த திருவிழாவில் முதல் 9 நாட்களில் தினமும் ஒரு எலுமிச்சை பழம் வீதம் முருகனின் வேல் மீது வைத்து பூஜை செய்யப்படும். பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது.

இந்த எலுமிச்சை பழத்தை சாப்பிட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், தீராத நோய்கள் குணமாகும் என்றும், வியாபாரம் செழிக்கும் என்பதும் அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 

ஊர் நாட்டாமை, மரச்செருப்பின் மீது நின்றபடி ஏலத்தைத் தொடங்கி வைத்தார். அதில் முதல் நாளன்று பூஜையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலம் எடுக்கப் பெரும் போட்டியே நிலவியது. அதில், கடும் போட்டிக்கு இடையே ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா - வெங்கடேசன் தம்பதியினர் முதல் நாள் பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை 45,500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். 2-ம் நாள் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் 3-ம் நாள் வைத்து பூஜை செய்யப்பட எலுமிச்சை பழம் 16 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது. குறைந்தபட்சமாக 5 ஆயிரம் ரூபாய்க்கு எலுமிச்சை பழம் ஏலம் போனது.இந்த ஏலத்தில் மொத்தமாக 9 எலுமிச்சை பழங்களும் சேர்ந்து 1,43,000 ரூபாய்க்கு ஏலம் போனது.