தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்..

 
anna anna


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில்  போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால்  9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு முழுவதும்  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்லூரிகளுக்கு போதுமான மாணவர் சேர்க்கை, அடிப்படை வசதிகள், கல்லூரிக்கான உட்கட்டமைப்பு  வசதிகள் ஆகியவற்றை ஆராய்ந்து இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும். இதனை பல்கலைக்கழகமே மேற்கொண்டு வருகிறது.  அந்தவகையில்  கடந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  

anna university

தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம்  அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.  இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் ( 2024 - 2025)  433 பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  இந்த கல்லூரிகளில்  இளநிலை படிப்புகளுக்காக  1.80 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்பும் பணியை  தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் இணைய வழியில் நடத்தி வருகிறது.  

அதன்படி, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில்   1 லட்சத்து 99, 868 பேர் பங்கேற்கின்றனர்.  இதன்மூலம் நடப்பாண்டு 9 பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது,  உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன.