ஊசி போட்ட அடுத்த நொடி பறிபோன 8 மாத குழந்தை உயிர்

 
ச் ச்

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இருதய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்  பள்ளிப்பட்டு தாலுக்கா அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேஷ்- கீர்த்தனா தம்பதியினரின் 8 மாத ஆண் குழந்தை அஷ்வந்த். இந்த குழந்தைக்கு பிறந்த நாள் முதல் இதயக் கோளாறு பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம்  31-ஆம் தேதி அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  இன்று காலை ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தையின் இறப்புக்கான காரணத்தை மருத்துவர்களோ, செவிலியர்களோ முறையான தகவல் அளிக்காமல் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகன் காந்தியின் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எந்த தகவலும் மருத்துவர்கள் ஏன் தெரிவிக்கவில்லை என்றும், சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்தி இறப்புக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும் 8 மாத ஆண் குழந்தையின் இறப்புக்கு அரசு தரப்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.  குழந்தையின் இருதயத்தில் ஓட்டை இருந்ததாலும் நுரையீரலில் தண்ணீர் சேர்ந்துவிட்டதாலும் அதை அகற்ற முடியாத காரணத்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவ கல்லூரி முதல்வர் மோகன் காந்தி விளக்கம் அளித்துள்ளார்