தமிழக மீனவர்கள் 7 பேர் கைது- முதல்வர் கடிதம்
நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து 2 படகுகளில் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் 7 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டனர்,
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன் பிடி படகுத்துறையில் வடகிழக்கு பருவ மழைக் காலமான அக்டோபர் தொடங்கி ஜனவரி வரை வெளியூர் மீன்வர்கள் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் இங்கு தங்கியிருந்த மயிலாடுதுறை மாவட்டம், பெருமாள்பேட்டையைச் சேர்ந்த தேவராஜ், ஸ்ரீதர், சீர்காழி அடுத்த புதுக்குப்பம், சரண்ராஜ் , கலைவாணன் ஆகிய நான்கு மீனவர்களும் பைபர் படகு ஒன்றில் செவ்வாய்க்கிழமை பகல் 2 மணிக்கு கடலுக்குள் சென்றனர். இதே போல, மற்றொரு படகில் சீர்காழி அடுத்த வானகிரி ராஜேஷ், சத்தியா, தனிவேல் ஆகிய மூவரும் சென்றனர். இவர்கள் 7 பேரும் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். மேலும், மீனவர்கள் சென்ற இரண்டு படகுகளுடன் அவர்களது உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் இன்று (21.01.2026) சிறைபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதும் தடையின்றித் தொடர்வது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இன்றுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 254 மீன்பிடிப் படகுகளும், தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர்.தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகத்தினருக்குக் கடுமையான இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கையில் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், அவர்களது குடும்பத்தினருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியினையும் தொடர்ச்சியான மன உளைச்சலையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாகச் சீர்குலைத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


