திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராஜகோபுரம் வரை செருப்பு அணிந்து வந்த பக்தர்கள்- 7 பேர் சஸ்பெண்ட்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ராஜகோபுரம் வரை செருப்பு அணிந்து வந்த பக்தர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பணியில் அலட்சியமாக இருந்ததாக தேவஸ்தான அதிகாரி இருவர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வரக்கூடிய பக்தர்களை பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சனிக்கிழமை காலை வி.ஐ.பி. தரிசனத்தில் வந்த பக்தர்கள் சிலர் பல்வேறு சோதனைகளை தாண்டி ராஜகோபுரம் வரை செருப்பு அணிந்து வந்தனர். ராஜகோபுரம் அருகே இதனை பார்த்த சக பக்தர்கள் தேவஸ்தான விஜிலென்ஸ் பணியாளர்களுக்கு தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பக்தர்கள் அணிந்த செருப்பை வெளியே கழற்ற வைத்து கோயிலுக்குள் அனுமதித்தனர். பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வரும் அவசரத்தில் சென்று இருந்தாலும் வரிசையில் வைகுண்டம் காம்ப்ளக்சில் இரண்டு முறை போலீசார் சோதனை செய்வதோடு தேவஸ்தான அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு உள்ள நிலையில் சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் வெள்ளை நிற செருப்பை அணிந்து வந்த சம்பவம் தேவஸ்தான ஊழியர்களின் அலட்சியத்தை காண்பிப்பதாக உள்ளதாக சக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகளின் அலட்சியம் குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு கண்டனம் தெரிவித்து இதுகுறித்து விசாரணையும் நடத்த உத்தரவிட்டனர். இதனையடுத்து பணியில் அலட்சியமாக இருந்ததற்காக செயல் அதிகாரி ஷியாமலா ராவ் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் நடைபாதை மண்டபம் மற்றும் டவுன் ஸ்கேனிங் பாயிண்டில் பணியில் இருந்த தேவஸ்தான ஊழியர்களான மூத்த உதவியாளர் சக்ரபாணி, ஜுனியர் உதவியாளர் வாசு ,
பாதுகாப்பு காவலர்கள் டி. பாலகிருஷ்ணா, வசுமதி, டி. ராஜேஷ் குமார், கே. வெங்கடேஷ், எம். பாபு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தார். மேலும் சிறப்பு அதிரடிப்படை போலீசார்கள் தங்கள் பணியில் அலட்சியமாக இருந்ததற்காக சி. ரமணய்யா, பி. நீலாபாபு, டி.எஸ்.கே. பிரசன்னா, ச. சத்யநாராயணா, போலி நாயுடு, எஸ். ஸ்ரீகாந்த் ஆகியோரை இடைநீக்கம் செய்ய அந்ததுறை இயக்குநர் ஜெனரலுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.