சென்னையில் முக்கிய சந்திப்புகளில் உள்ள 68 பழைய சிக்னல்கள் விரைவில் மாற்றம்

 
Chennai Traffic

சென்னையில் முக்கிய சந்திப்புகளில் உள்ள 68 பழைய சிக்னல்களை மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  அண்ணா நகரில் முக்கிய 5 சந்திப்புகளில் நிறுவப்பட்ட TROZ ஒரு வெற்றிகரமான திட்டம் ஆகும். ஒரு நாளைக்கு சுமார் 7,000 சலான்களை தானாக உருவாக்குகிறது. மேலும் ஸ்பென்சர், ஈகா சந்திப்பு மற்றும் மின்ட் சந்திப்பு ஆகிய 3 இடங்களில் TROZ புதிதாக நிறுவ ரூ.10.5 கோடி நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். போக்குவரத்து விதிமீறல்களைப் பதிவு செய்ய 11 சந்திப்புகளில் 15 கேமராக்கள் நிறுவப்பட்டு ஐ.டி.ஆர்.எஸ் அமைப்பால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனுமதியில்லாத வழியில் செல்பவர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டுபவர்களையும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்பவர்களையும் கண்டறிந்து தானாகவே இ-சலான் உருவாக்குகிறது. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள இ-சலான் பற்றிய தகவல்களைப் பெற 12 அழைப்பு மையங்கள் தொடங்கப்பட்டது இந்த அழைப்பு மையங்கள் மூலம் மொத்தம் ரூ.28,97,46,750/-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக போக்குவரத்து சிக்னல் தெரிவதற்காக 25 புதிய எல்.இ.டி. கம்பங்கள் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ளன. பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள 68 சிக்னல்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது பொதுமக்களுக்கு அதிக காவலர்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக 186 முக்கிய சந்திப்புகளில் ரிமோட் சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன.  

பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய 104 சந்திப்புகளில் ஒலிபெருக்கி மற்றும் பாடல்கள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள 47 ரோந்து வாகனங்கள் மூலம் விபத்து அழைப்புகள், 103 அழைப்புகள், சமூக ஊடக அழைப்புகள் வரும் இடங்களுக்கு விரைந்து சென்றும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளிலும் ரோந்து வாகனங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களுக்கு விபத்துக்கள் நடைபெறுவதற்கான நேரில் சென்று பார்வையிட்டு, காரணங்களை அறிந்து நெடுஞ்சாலை துறையினர், பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் போக்குவரத்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் அடங்கிய குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.