20 ஆண்டுகளில் 6658 தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு - சு. வெங்கடேசன் எம்.பி.,

 
su venkatesan

20 ஆண்டுகளில் 6658 தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு

சு. வெங்கடேசன் எம்பி கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில்

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது பற்றியும் அவர்களை மீட்கவும் அவர்கள் மீதான வன்முறை பிரயோகத்தை தடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (சி.பி.எம்) எழுப்பிய கேள்விக்கு (எண் 44/02.02.2024) வெளியுறவு இணை அமைச்சர் வி. முரளிதரன் பதில் அளித்துள்ளார்.

fisher

அதன்படி பாஜக ஆட்சியில் உள்ள 2014 - 24 காலத்தில் 3137 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். 2004 - 2013 காலத்தில் 2915 பேரும் வாஜ்பாய் ஆட்சியில் இருந்த 2003 இல் 606 பேர் சிறைப் பிடிக்கப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய மீனவர்கள் மீது 13 தாக்குதல்களை அண்டை நாடுகளின் கடற்படைகள் தொடுத்துள்ளன. அண்டை நாட்டு சிறைகளில் விடுவிக்கப் படாமல் தற்போது இருப்பவர்கள் 266 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 ல் மட்டுமே ஒரு தாக்குதல், கைது கூட இல்லை.

tn

கைது, தாக்குதல் பற்றிய தகவல் வந்தவுடன் இந்திய அரசு ராஜீய உறவுகள் வாயிலாக தொடர்பு கொண்டு விடுவிக்க முயற்சிகளை மேற்கொள்ளப்படுகின்றன. தூதரக பணியாளர்கள் சிறைகளுக்கு சென்று கைதிகளின் பாதுகாப்பு, நலம் விசாரிக்கப்படுகின்றன. சட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. இரு தரப்பு தீர்வு முறைமைகள் உள்ளன. மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் பலவந்தம் இல்லாமல் அணுகுமாறு அண்டை நாடுகளின் அரசுகளை கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார்.

*சு.வெங்கடேசன் கருத்து*

su venkatesan

அரசு புள்ளி விவரங்களையும், வழக்கம் போல அலுவல் ரீதியான வார்த்தைகளை மட்டுமே பிரகியோகித்துள்ளது. அரசியல் உறுதியுடன் நடவடிக்கை தேவைப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது வருந்தத் தக்கது.

ஆகவே இரு தரப்பு ஒப்பந்தம் உணர்வு பூர்வமாக நிறைவேற்றப் படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்பி கூறினார்.