கூட்டுறவு துறையில் 6,500 பணியிடங்கள் : விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்..

 
 அமைச்சர் ஐ.பெரியசாமி


கூட்டுறவு துறையில் விரைவில் 6,500 புதிய ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக  அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.  

69வது கூட்டுறவு வார விழா நேற்று  சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில்  நடைபெற்றது.  இதில் பயனாளர்களுக்கு  நலத்திட்ட  உதவிகளை வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, “ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.  நாடாளுமன்ற தேர்தலை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. நாளைக்கு தேர்தல் வைத்தாலும் கூட நாங்கள் வெற்றி பெறுவோம்.  

தமிழக அரசு

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார்.  இந்தியாவில் பொது விநியோக திட்டத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழகம் தான். கூட்டுறவு துறையின் முன்னோடி தமிழகம் தான். இந்தியாவிலே முதல் முறையாக தமிழகத்தில் ஆடு, மாடு வளர்ப்போருக்கு வட்டியில்லா கடனாக ரூ.800 கோடி அளவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வரை ரூ.40 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 6 மாதத்தில் இது ரூ.100 கோடியாக உயரும். மேலும் கூட்டுறவு துறை ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கூட்டுறவு துறையில் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி முதல் 6,500 புதிய ஊழியர்கள் தேர்வு செய்து நியமிக்கப்பட உள்ளனர்” என்று தெரிவித்தார்..