பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு...சீமானுக்கு எதிராக 60 வழக்குகள் பதிவு!
பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடலூரில் நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “உலகில் எந்த நாட்டில் மது இல்லை. உடல் இச்சை வந்தால் பெற்ற தாயிடமோ, மகளிடமோ உறவு வைத்துக் கொள் எனக் கூறுவதுதான் பெண் உரிமையா? திராவிட கழகங்களுக்கு என்ன தத்துவம் இருக்கிறது. கள் இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னை மரங்களை வெட்டியவர் பெரியார். மரத்தை வெட்டி சாய்ப்பதுதான் பகுத்தறிவா? அல்லது எங்கள் தோப்பில் கள் இறக்க அனுமதி இல்லை என்று கூறுவது பகுத்தறிவா? தந்தை பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. சமூக நீதிக்காக போராடியது தந்தை பெரியாரா? அல்லது ஆனைமுத்துவா? என கூறினார். சீமானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்த நிலையில், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடலூர், மதுரை, கோவை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் புகார் அளித்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.