தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலி! கதறும் பெற்றோர்
ஈரோட்டில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்த 6 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தான்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூளை BB கார்டன் பகுதியை சேர்ந்த மணிகண்டன், கோகிலா தம்பதியினருக்கு 3 ஆண் குழந்தைகள் இருந்த நிலையில், இவர்களின் 3 வது மகனான 6 வயது சிறுவன் தஷ்வந்த் வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்துள்ளான். அப்போது சிறுவன் வீட்டின் அருகே உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டி திறந்திருப்பது தெரியாமல் கவனக்குறைவாக தண்ணீர் தொட்டியில் விழுந்து மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிர் இழந்தான். சிறுவன் தஷ்வந்த்தை காணாமல் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடி உள்ளனர், அப்போது தண்ணீர் தொட்டியில் தஷ்வந்த் உயிரிழந்த நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தண்ணீர் தொட்டியில் இறங்கி தஷ்வந்தை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்
சிறுவன் தஷ்வந்த்தை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் தனது மகன் இறந்ததை உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்த தந்தை கதறி அழுத காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க செய்தது. இது குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


