சிமெண்ட் லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி

 
accident

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புளியங்குடியை சேர்ந்த 6 பேர் காரில் குற்றாலத்தில் குளித்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிபட்டியில் சென்றுகொண்டிருந்த போது காரும், சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த விபத்து காரணமாக தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.