அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு

 
dvac raid

அரசு ஒப்பந்ததாரர்கள் இருவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரிசோதனையில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கான்ட்ராக்டர் செய்யாதுரை வீட்டில் மீண்டும் சோதனை; தமிழகத்தை கதிகலக்கும்  ரெய்டுகள்!

ராமநாதபுரத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான செய்யாத்துரை தனது எஸ்.பி.கே நிறுவனம் சார்பாக அதிகளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. அதே போல முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புடைய  மற்றொரு அரசு ஒப்பந்ததாரரான சந்திரசேகர் தொடர்புடைய இடங்களிலும் வரி ஏய்ப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. 

இவ்விரு அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 40 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் இருவரும் சேர்த்து 500கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை மறைத்து கணக்கு காட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் பல்வேறு பொருட்களை வாங்கியதற்கு கணக்கு காட்ட போலி ரசீதுகளை பயன்படுத்தி இருப்பதும், அதன் மூலம் பெருமளவில் வருமானத்தை மறைத்து இருப்பதும் வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களில் போலி ரசீதுகளை பயன்படுத்தி பல்வேறு துணை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருமானத்தை ஈட்டிருப்பதும், அதற்குண்டான ஆவணங்கள் மற்றும் பொய்யான பண பரிவர்த்தனைகள் அடங்கிய கோப்புகளை மறைத்து வைக்க ரகசிய இடத்தை பயன்படுத்தி வந்ததும் வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் மூலம் இரு ஒப்பந்ததாரர்களும் சேர்ந்து கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.