சென்னை எம்.ஐ.டியில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களில் 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி..
சென்னை எம்.ஐ.டியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 80 மாணவர்களில் 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பாத தகவல் வெளியாகியுள்ளது.
குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அங்கு மாணவர்களுக்கு தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்துள்ளன. இதனையடுத்து மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதலில் 4 மாணவிகளுக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து விடுதி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் என 1,417 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், நேற்று 67 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று மேலும் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து எம்.ஐ.டி கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 67 மாணவர்களின் மாதிரிகளும் ஒமைக்ரான் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதில் 50 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 330 பேரின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அந்த முடிவுகள் வந்தால் தொற்று பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விடுதியில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். கல்லூரி வளாகத்தில் இருந்து மாணவர்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.