அரசு பள்ளி மதிய உணவில் பூரான்- 50 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 24 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ளது வரகூர்பேட்டை கிராமம். இங்கு அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் மாணவர்கள் வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது மதிய உணவு பாத்திரத்தில் பூரான் ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்துணவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் சாப்பிடாத மாணவர்களிடம் யாரும் உணவு சாப்பிட வேண்டாம் என்று கூறினர்.
இதையடுத்து உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு லேசான மயக்கமும், தலை சுற்றிலும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆட்டோ மூலமும், 108 ஆம்புலன்ஸ் மூலமும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் 24 மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் போலீசார் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வருவாய்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
பள்ளியில் சமைக்கப்பட்ட மதிய உணவில் பூரான் விழுந்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.