தண்ணீர் பேரலில் மிதந்த 5 மாத குழந்தை! தாய் சொன்ன அதிர்ச்சி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 5 மாத ஆண் குழந்தை வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் பேரலில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குழந்தையின் தாய் முகமூடி அணிந்த வந்த மூன்று நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து தாலி செயினை பறித்து கொண்டு, குழந்தையை தூக்கி சென்றதாக கூறியதன் அடிப்படையில், அவரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கண்ணாங்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(31) மற்றும் புலியூரை சேர்ந்த லாவண்யா(21) இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 5 மாதங்களான ஆதிரன் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், குடும்ப தகராறு காரணமாக லாவண்யா தனது பெற்றோர் வீட்டில் கடந்த மூன்று மதமாக குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். கணவர் மணிகண்டன் நாக்பூர் மாநிலத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இருவருக்கும் இடையில் வயது வித்தியாச பிரச்சனை மற்றும் குடும்ப பிரச்சனையில் விவாகரத்து பெரும் எண்ணத்தில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் புலியூரில் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் லாவண்யா நள்ளிரவில் குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது, மற்ற குடும்ப உறுப்பினர்களும் உறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது லாவண்யா திடீரென குழந்தையை காணவில்லை என கத்தி கூச்சலிட்டதாகவும், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் தாலிச் சங்கிலியை பறித்து சென்றதாகவும், குழந்தையையும் தூக்கி சென்றதாகவும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் வீட்டைச் சுற்றி குழந்தையை தேடி உள்ளனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள தண்ணீர் பேரலில் குழந்தையின் உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் லாவண்யாவை கீரனூர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணிகண்டன் தரப்பையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். லாவண்யா முண்ணுக்குப்பின் முரணாக தகவல்களை கூறி வருவதால் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.