இந்தாண்டு 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு; 28 பேர் மரணம்- சுகாதாரத்துறை

 
dog dog

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதித்துள்ளதாகவும், 28 பேர் ராபீஸ் நோயால் உயிரிழந்து உள்ளதாகவும் தமிழகப் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

lot of dog attack

கடந்த ஆண்டு 4.8 லட்சமாக நாய் கடியால் பாதித்துள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதித்துள்ளனர். கடந்த ஆண்டு 43 பேர் நாய் கடியால் உயிரிழந்த உள்ள நிலையில் இந்த ஆண்டு இதுவரை 28 பேர் உயிரிழந்து உள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், நகரப்புற மருத்துவமனைகளில் நாய் கடிக்கு தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ராபிஸ் நோயால் பாதிப்படைந்தவர்கள் ஏஆர்வி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது

நாய் தனது நகத்தால் கிழித்தாளோ? அல்லது நாய் மூலம் ஏதேனும் சிறிய காயங்கள் ஏற்பட்டாலும் RIG என்று சொல்லக்கூடிய Rabies Immunoglobulin என்ற 3ஆம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நான்கு டோஸ் ARV தடுப்பூசி அட்டவணைப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சிலர் செல்லப்பிராணிகள் அல்லது பழக்கமான நாய்கள் கடித்தால் பாதிப்பில்லை என்று கருதி, தடுப்பூசி போடுவதைத் தவிர்த்தால் அது ஆபத்தில் சென்று முடிந்து விடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கடித்தது செல்லப்பிராணியா அல்லது தெரு நாய்களா என்பதைப் பொருட்படுத்தாமல் தடுப்பூசி போட வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது

தமிழகத்தில் எந்தப் பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதோ நகராட்சி நிர்வாகத்துறை ஊழியர்கள் அதனை பிடித்து கருத்தடை செய்து வருகின்றனர். அவ்வப்போது தெரு நாய்கள் பிடித்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. நாய்க்கடியால் மருத்துவமனைக்கு வந்தால் உரிய நேரத்தில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ராப்பீஸ் நோயால் பாதிப்படைந்தவர்கள் மருத்துவமனையில் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. ராபிஸ் நோயிலிருந்து மீள வேண்டும் என்றால் நான்கு டோஸ் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.