மதுரை அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 5 பேர் பலி

 
madurai blast

மதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில், அங்கு பணியாற்றி வந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மதுரை மாவட்டம் அழகுசிறை பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில், திடீரென பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலையில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் இந்த வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பட்டாசு ஆலையின் 2 வெடி மருந்து கிடங்குகளில் பணியில் இருந்த பணியாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே வெடி விபத்தில் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் 5 பேரும் வடக்கன்பட்டியை சேர்ந்த வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா உள்பட 5 பேர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல் இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.