ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசின் 5 திட்டங்கள்..

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையிலான மத்திய அரசின் 5 திட்டங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்..
ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு, அரசின் திட்டங்கள் மற்றும் உதவித்தொகை, பரிசுத்தொகை உள்ளிட்ட சலுகைகளை பெறவும் ரேஷன் கார்டுகள் அவசியமாகிறது. ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழைகளுக்காக மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய 5 திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா: இது மத்திய அரசின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் ஆயுஷ்மான் கார்டுகள் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை இலவசமாகப் பெற முடியு. இந்த அட்டையை பயன்படுத்தி ஏழைக் குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம். தங்களிடம் வெள்ளை ரேஷன் கார்டு இருந்தால், நீங்கள் இந்த காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றவுடன், நீங்கள் பலன்களைப் பெறலாம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா: சொந்த வீடு என்பது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஒவ்வொருவருக்கும் பெரும் கனவு. அந்த கனவிற்கு வலுசேர்க்கும் திட்டம் தான் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். அதாவது ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1,20,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. அண்மையில் கூட இத்திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய குடும்பங்கள் பயன்பெறும் வகையிலான அறிவிப்பை அரசு வெளியிட்டது. வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இந்த திட்டத்தை பயன்படுத்தி உங்கள் சொந்த வீடு குறித்த கனவை நனவாக்கலாம்..
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா: இது BPL (வறுமை கோட்டுக்கு கிழ் உள்ள) குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் மற்றும் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டமாகும். மேலும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் பெற்று, அதனை ரீஃபில் செய்தால் ரூ.300 வரை மானியமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே 2 கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், விரைவில் மூன்றாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா: கைவினைஞர்களின் நலனுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனாவை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது இந்த திட்டத்தின் கீழ், கைவினைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி மற்றும் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கைவினை பொருட்கள் செய்ய தேவையான கருவிகள் வாங்கவும் ரூ.15,000 வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது. 5 முதல் 7 நாட்கள் வரை இணைய வழியில் பயிற்சி வழங்கப்படும் நிலையில், பயிற்சியின்போது நாள் ஒன்றுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
அந்த்யோதயா அன்ன யோஜனா: இது அனைவரும் அறிந்த, பயன்படுத்தி வருகிற இலவச மற்றும் குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் பெறும் திட்டம். மத்திய அரசால் கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் கோதுமை, அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை இலவசமாகப் பெறலாம்.