மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து கையெழுத்து- பாஜகவினர் 5 பேர் கைது

நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனிடையே மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்க முடியும் என மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த நிலையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையெழுத்து இயக்கத்தை நேற்று முன் தினம் தொடங்கி வைத்தார். கையெழுத்து இயக்கம் தொடங்கி 48 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இணையதளம் வழியாக கையெழுத்திட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும், பெற்றோர்களிடம் பாஜகவினர் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
சென்னை காரப்பாக்கத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து பெற்றனர். அப்போது பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்து பெற்றதால் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை காரப்பாக்கம் பகுதியில் பாஜகவின் கையெழுத்து இயக்கத்தில், அரசுப் பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்து இடச்செய்த விவகாரத்தில் பாஜகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரில், கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஜி.சூர்யா, சுந்தரம், கோடீஸ்வரன், மோகன் மற்றும் அன்பரசு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.