கோவை மாணவர் கொலை - 5 பேர் கைது..!
கோவை ஒத்தக்கால்மண்டபம் பூங்கா நகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலர் அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், அங்குள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று, இரண்டாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவர் இளவரசன் (18) என்பவரையும் அவரது நண்பர்களையும் தாக்கி, செல்போனைப் பறித்துச் சென்றது. இது குறித்து இளவரசன் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்தச் சம்பவத்தில் அமுதன் (19) என்ற மாணவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அதிகாலையில் நடைபெற்ற முந்தைய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்புடன் தொடர்புடைய சிலர், அமுதனை அச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் என அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது..
இதனிடையே, காலை 8.30 மணியளவில் அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன் (19) ஆகிய இருவரையும் மலுமிச்சம்பட்டி அருகே ஒரு கும்பல் வழிமறித்தது. அதிகாலை சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், இருவரையும் அருகில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான அமுதன் காலை 10 மணியளவில் தனது அறைக்குத் திரும்பியுள்ளார். பிற்பகல் 3 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீமன் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய 5 கல்லூரி மாணவர்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் தொடர்புடைய பிற நபர்களையும் தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட அமுதன், கடந்த மாதம் கல்லூரி விடுதி சமையல்காரரைத் தாக்கிய வழக்கில் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் அமுதன் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல், அன்று அதிகாலை பூங்கா நகர் பகுதியில் நடைபெற்ற முந்தைய தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாகவும், அச்சம்பவத்தில் அமுதனுக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்பின் காரணமாகவும் நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கடலூரைச் சேர்ந்த ஆராஅமுதன் (20), சிவகங்கையைச் சேர்ந்த அரவிந்த் (21), திருவாரூரைச் சேர்ந்த சிவ ரோஹித் (20), பெரம்பலூரைச் சேர்ந்த மணி பாலு (20) ஆகிய 5 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் அடையாளம் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

