44வது செஸ் ஒலிம்பியாட் : முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது..
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் இன்று தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அடுத்த மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஓபன் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்றுள்ளன. இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் களம் காண்கிறது. அதிலும் ஓபன் பிரிவில் இந்தியா ஏ அணி - ஜிம்பாப்வே அணியுடன் போட்டியிருகிறது. மேலும் இந்தியா பி அணி - ஐக்கிய அரபு அமீரக அணியுடன் மோதுகிறது. அதேபோல் ஓபன் பிரிவில் இந்திய சி அணி - தெற்கு சூடான் அணியுடன் களம் காண்கிறது.
இதில் இந்திய ஆடவர் ஏ அணியில், ஹரிகிருஷ்ணன், நாராயணன், விதித் குஜராத்தி, சசி கிரண் ஆகிய வீரர்களும், பி அணியில் நிஹால் சாரின், குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன், ரவுனாக் சத்வானி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஓபன் பிரிவில் இந்திய சி அணியில் சூர்யா சேகர் கங்குலி, சேதுராமன், அபிஜீத் குப்தா, கார்த்திகேயன் முரளி, அபிமன்யு புரணி பங்கேற்கின்றனர். இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் சுற்று போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கும், பெண்கள் பிரிவில் 8 மாத கர்ப்பிணியான ஹரிதாவிற்கும் ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 3 மூன்று மணிக்கு தொடங்கிய முதல் சுற்று போட்டியின் முடிவுகள், சுமார் 90 நிமிடங்களுக்குப் ( 1.30 மணி நேரம் ) பின்னரே தெரியவரும். ஒவ்வொரு நாட்டை சேர்ந்த அணியினரும், தங்களுக்கு எதிராக ஒதுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்த அணிகளுடன் களத்தில் உள்ளனர். இதில் 2 அணிகளாக களம் காணும் 8 வீரர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை FIDE என்ற யூடியூப் சேனலில் நேரலையில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.