தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 401 காவலர்களுக்கு கொரோனா..
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 401 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் 2 மடங்காக பாதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 பேர் உயிரிழந்துள்ளனர். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கொரோனா கைவசம் சிக்கி வரும் சூழலில், முன்களப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறனர். ஊரடங்கு, விட்டிலிருந்தே பணிபுரிவது என பல துறைகளைச் சேர்ந்தவர்களும் விடுமுறை கிடைக்கும் நிலையில், முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவல் துறையினர் போன்றோருக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
அதிலும் கொரோனா பரவலில் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என முன்கள பணியாளர்களில் முக்கிய பங்கு வகிக்கும் காவல்துறையினர் ஏராளமனோர் கொரோனாவுக்கு இரையாகி வருகின்றனர். அதிகபட்சமாக டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா 3வது அலையில் தமிழகத்தில் 401 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 7 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள். மேலும் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 141 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர். இதுவரை கொரோனா 3 அலைகளிலும் சேர்த்து 8,030 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் இதுவரை 143 காவலர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. காவலர்கள் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது, சக பணியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.