பாலமேடு ஜல்லிக்கட்டில் 4 சுற்றுகள் நிறைவு.. 19 பேர் காயம்...
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 4 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரகள் அடக்கி வருகின்றனர். இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள், 335 மாடு பிடிவீரர்கள் களம் காண்கின்றனர். இதில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கார், மொபட், பீரோ , கட்டில், சைக்கிள், அண்டா, நாற்காலிகள், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் சிறந்த வீரர்கள் மற்றும் காளைகளுக்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 4வது சுற்று முடிவில், 16 காளைகளை பிடித்து மணி என்பவர் முதலிடத்தில் உள்ளார். பின்னர் 11 களைகளை அடக்கி ராஜா 2 வது இடத்திலும், அரவிந்த், வாஞ்சிநாதன் ஆகிய இருவரும் தலா 9 காளைகளை அடக்கி 3வது இடத்திலும் உள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் 19 பேர் காயம் அடைந்துள்ளனர். 4வது சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள் 4 பேருக்கும், மாட்டின் உரிமையாளர் ஒருவர், காவல் ஆய்வாளர் ஒருவர் உட்பட 19 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.