ஆடல், பாடல் குழுவினர் சென்ற கார் அரசு பேருந்து மீது மோதி விபத்து - 4 பேர் பலி

 
Accident

நாகர்கோவில் அருகே ஆடல் பாடல் குழுவினர் சென்ற கார் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல ஆடல், பாடல் குழுவினர்கள் திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருச்செந்தூர் வந்திருந்தனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஒரு காரில் கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 11 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் கார் வந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் இந்த விபத்தில் பயணித்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், சிலர் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.