உர வியாபாரி வீட்டில், வருமான வரி சோதனையில் – ரூ.4 கோடி பறிமுதல்!
கோபிசெட்டிபாளையம்:
கோபிசெட்டிபாளையத்தில், உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் விடிய விடிய நடைபெற்ற வருமான வரி சோதனையில், கணக்கில் வராத ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில், ராயல் பெர்டிலைசர் என்கிற உர விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளார் சோமசுந்தரம், அருகில் உள்ள ஸ்ரீநகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நல்லிரவு கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து 10 க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் திடீர் என சோமசுந்திரத்தின் வீட்டில் சோதனை நடத்த தொடங்கினர்.
உர நிறுவனம் அருகில் அமைந்துள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டனர். விற்பனை மற்றும் கொள்முதல் ஆவணங்கள் அடிப்படையில், கணக்கில் வராத ரூ.4 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். எனினும் இந்த தகவலை சோமசுந்தரம் தரப்பினர் மறுத்துள்ளனர்.
சோமசுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் 12 பேருக்கு சொந்தமான காலி இடம் கோபிசெட்டிபாளையம் அருகே விற்பனை செய்ததாகவும், அந்த தொகை ரூ.4 கோடியை பிரித்து கொடுப்பதற்காக வீட்டில் வைத்திருந்த போது அதிகாரிகள் நடத்திய சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற உள்ளதாகவும் கூறினர். இந்த சம்பவத்தால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.