305 பள்ளிகளை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை..

 
தமிழக அரசு

ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 305 பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.8.37 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.  

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.  ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் தேவையின் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் மாணாக்கர் வசதியாக கல்விப் பயிலும் வகையில் 99 நடுநிலைப் பள்ளிகள் 108 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 8,060 நீள் இருக்கைகள் மற்றும் 305 பள்ளிகளுக்கு தேவையான இரும்பு அலமாரி ஆகிய அறைகலன்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் ரூ.7.46 கோடி செலவில் வழங்கப்படும்"

305 பள்ளிகளை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை..

மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு. ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கருக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதன் மூலம் கல்வி கற்பதற்கான சிறந்த ஒரு சூழலை உருவாக்க முடியும் என்பதன் அடிப்படையில் 99 நடுநிலை, 108 உயர்நிலை மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 305 பள்ளிகளுக்கு தேவையான மேசையுடன் கூடிய இருக்கை மற்றும் இரும்பு அலமாரிகள் டான்சி மூலம் வாங்கி வழங்கிடவும், இதன் பொருட்டு செலவினமாக ரூ.8,37,91,008/- (ரூபாய் எட்டு கோடியே முப்பத்தேழு இலட்சத்து தொண்ணூற்று ஒன்றாயிரத்து எட்டு மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. (அரசாணை (ப) எண்.221, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந7)துறை , நாள் 31.10.2022)தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.