பீரோ இறக்கும்போது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி.. தருமபுரியில் சோகம்..
தருமபுரியில் பீரோ இறக்கும்போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது வீட்டில் இலியாஸ் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இலியாஸ் வீட்டை காலி செய்துவிட்டு, வேறொரு வீட்டிற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக வீட்டை காலி செய்யும் பணியின் ஈடுபட்டுள்ளார். அப்போது 2வது மாடியில் இருந்து இரும்பு பீரோவை கயிறு கட்டி இறக்கியுள்ளனர். எதிர்பாராத விதமாக பீரோ வீட்டின் அருகே இருந்த இரும்புக் கம்பியில் உரசியதால், மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் வீட்டின் உரிமையாளர் பச்சையப்பன், வாடகைக்கு குடியிருந்த இலியாஸ், வாடகை வண்டி ஓட்டுநர் கோபி ஆகிய மூன்று பேரும் மின்சாரம் பாய்ந்து நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கியதில் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் குமார் என்பவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உயிரிழந்த 3 பேரது உடல்களையும் மீட்ட காவல்துறையினர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி , மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தருமபுரி நகர போலீஸார், விபத்து எப்படி நேர்ந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தருமபுரி நகராட்சி பகுதியில் பீரோவை இறக்கும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.