குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு..

 
நீரில் மூழ்கி உயிரிழப்பு


சிவகங்கை மாவட்டம் படமஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

புதுக்கோட்டை  மற்றும்  சிவகங்கை எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உலகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகராஜன்,  லட்சுமணன் சகோதரர்கள். இதில் நாகராஜனுக்கு 10 வயதில் யாழினி என்கிற மகளும்,  லட்சுமணனுக்கு  மகேந்திரன் (7), சந்தோஷ் (5) ஆகிய  2 மகன்களும் உள்ளனர். சிறுவர்கள் மூன்று பெரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள படமஞ்சி என்ற கிராமத்தில் உள்ள செட்டி ஊரணி அருகே  விளையாடி கொண்டிருந்துள்ளனர். தொடர்ந்து ஊரணியில் குளிக்கச்சென்ற சிறுவர்கள்  ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  சிறிது நேரத்தில் சிறுவர்களின் உடல்கள் குளத்தின் மேல் மிதந்துள்ளது.

இறப்பு

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில்,  சம்பவ இடத்திற்கு வந்த உலகம்பட்டி காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களுக்கும் சிறுவர்களின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.  இந்த சம்பவம் அங்கிருந்தோரை கலங்கச் செய்தது. பின்னர் சிறுவர்களின் உடல்கள்,  உடற்கூர் ஆய்விற்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தது  அந்த கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் உலகம்பட்டி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.