பெரியார் குறித்த சர்ச்சை கருத்து...! சீமான் மீது சென்னையில் 3 வழக்குகள் பதிவு
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உடல் இச்சை வந்தால் பெற்ற தாயிடமோ, மகளிடமோ உறவு வைத்துக் கொள் எனக் கூறுவதுதான் பெண் உரிமையா? திராவிட கழகங்களுக்கு என்ன தத்துவம் இருக்கிறது. கள் இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னை மரங்களை வெட்டியவர் பெரியார். மரத்தை வெட்டி சாய்ப்பதுதான் பகுத்தறிவா? அல்லது எங்கள் தோப்பில் கள் இறக்க அனுமதி இல்லை என்று கூறுவது பகுத்தறிவா? தந்தை பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. சமூக நீதிக்காக போராடியது தந்தை பெரியாரா? அல்லது ஆனைமுத்துவா? என கூறினார். சீமானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்த நிலையில், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். இந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சென்னை மேற்கு மண்டலம், கிழக்கு மண்டலத்தில் என சீமான் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.