ஆன்லைன் முதலீட்டால் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு - 3 பேர் கைது..

சென்னையில் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி மகாலட்சுமி என்கிற கல்லூரி மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏழுகிணறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருந்தது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதில் முதலீடு செய்து பணத்தை இழந்ததன் காரணமாக தற்கொலை முயற்சியை முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. இன்ஸ்டகிராமில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ரூ.30,000 முதலீடு செய்துள்ளார்.
ஆனால் விளம்பரம் பதிவிட்ட நபர்கள் பணத்தை ஏமாற்றி பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகாலட்சுமி, வீட்டில் இந்த விவகாரம் தெரிந்துவிடுமோ என்கிற அச்சத்தில் தற்கொலை முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். முதல்கட்டமாக சந்தேக மரணம் என்கிற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஆன்லைன் மோசடியின் காரணமாக மாணவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்து இன்ஸ்டாகிராமில் எந்த நபரை தொடர்பு கொண்டு பேசி வந்திருக்கிறார் என்பது குறித்தெல்லாம் விரிவான விசாரணையை சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்டனர்.
அந்த அடிப்படையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமானுல்லா கான், முகமது பைசல், முகமது ஆசிப் இக்பால் ஆகிய மூன்று பேர் பலரிடம் இதே போன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து தற்கொலைக்கு தூண்டியது மற்றும் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்தி மோசடி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து இருக்கின்றனர். தனிப்படை போலீஸார் மேற்குவங்கத்தில் முகாமிட்டு அவர்களை கைது செய்திருக்கின்றனர்.