வைகோ மகனுக்கு எதிர்ப்பு! 3 மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம்

 
vaiko

வைகோ மகனை கட்சிக்கு கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் 3 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம். சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட. கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

durai

சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் மற்றும் சில மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர், வழக்கறிஞர் அணி செயலாளர், உள்ளிட்டோர் துரை வைகோவை கட்சிப் பணிக்கு கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. சிவகங்கையில் அமைந்துள்ள மதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் வைகோவின் முடிவுக்கு எதிராக தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், வழக்கறிஞர் அணி செயலாளர் பாரத மணி உட்பட பலரும் கலந்து கொண்டனர். வைகோவின் மகனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலயே அவர்கள் மூவரும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.