செட்டிநாடு குழும நிறுவனத்தின் ரூ.298.21 கோடி சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை அதிரடி

செட்டிநாடு குழுமத்தை சேர்ந்த சௌத் இந்தியா கார்ப்ரேஷன் நிறுவனத்தின் ரூ.298.21 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.
விசாகபட்டினம் துறைமுகத்திலிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகத்துக்கு நிலக்கரி சரக்கு ரயில், கடல் வழியாக எடுத்து வரும் ஒப்பந்தம் சௌத் இந்தியா கார்ப்ரேஷன் நிறுவனத்துக்கு 5 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. ஒப்பந்த புள்ளி கோருவதற்கு முன்னரே, வெஸ்டர்ன் ஏஜென்சி மதராஸ் நிறுவனம் தாக்கல் செய்த சிவில் வழக்கை விசாரித்த சென்னை மாநகர சிவில் நீதிமன்றம் 2019 வரை அவ்வப்போது ஒப்பந்தத்திற்கு தடை விதித்தது. இதையடுத்து, சௌத் இந்தியா கார்ப்ரேஷன் நிறுவனம் விசாகபட்டினம் துறைமுகத்துக்கு 2011-12, 2018-19 காலகட்டத்தில் ரூ,217.31 கோடியை வரியாக செலுத்தியது. ஆனால் இதற்கு ஈடாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகம் சௌத் இந்தியா கார்ப்ரேஷன் நிறுவனத்துக்கு ரூ,1126.10 கோடியை வழங்கியது.
இது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகம் சௌத் இந்தியா கார்ப்ரேஷன் நிறுவனம் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 2001-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இதன் அடிப்படையில் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொண்டு வருகிறது. சௌத் இந்தியா கார்ப்ரேஷன் நிறுவனத்தில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சோதனையிட்டது. அதில் நிரந்தர வைப்பு தொகையில் ரூ.358.20 கோடி இருந்த நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கியது.
இந்நிலையில், செட்டிநாடு குழுமத்தை சேர்ந்த சௌத் இந்தியா கார்ப்ரேஷன் நிறுவனத்தின் ரூ.298.21 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி, வழக்கை தொடர்ந்து அமலாக்கத் துறை புலன் விசாரணை செய்து வருகிறது.