2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க..

தமிழகத்தின் அனைத்து மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 2, 748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (07-11-2022) கடைசி நாள் ஆகும்.. ஆகையால் விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முற்றிலும் மாநில அரசுப் பணியான , தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிகள் சிறப்பு விதிகளின் கீழ் நிரப்பப்படுகின்றன.
அதாவது, தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதிப்பித்தல் பணிகளை கிராம உதவியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
கல்வி தகுதி : கிராம உதையாளர் பணிக்கு 5-ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. மேலும், தமிழில், எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
முக்கியத் தகவல் : விண்ணப்பதாரர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். உதாரணமாக, சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, கெங்கவல்லி, காடையாம்பட்டி, மேட்டூர், ஓமலூர்., பெத்தநாயக்கன்பாளையம், சேலம், சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சங்ககிரி, தலைவாசல், வாழப்பாடி, ஏற்காடு வட்டங்களில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகையால், விண்ணப்பதாரர்கள் அந்த வட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்..
வயது வரம்பு: 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது-32, இதர பிரிவினருக்கு வயது-37 , மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வரம்புடன் 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் கொள்ளப்படும், முன்னாள் இராணுவத்தினர்களுக்கு பொதுப் பிரிவு வயது-48, இதர பிரிவினருக்கு வயது-53 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை : கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் agaram.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், கூடுதல் விவரங்களுக்கு தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தையும், அந்தந்த மாவட்ட வருவாய் இணையதளத்தையும் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.