கீழடி அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டெடுப்பு

 
மண்டை ஓடு

தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள்  தாழிகளினுள் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஆய்வு செய்ய முதன் முறையாக அமெரிக்க பல்கலைகழக நிபுணர்கள் குழுவும் களமிறங்கியுள்ளது. 

  தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் எட்டு குழிகளும், அகரத்தில் ஆறு குழிகளும், கொந்தகையில் நான்கு குழிகளும் தோண்டப்பட்டு 800க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. இதில் கொந்தகை தளத்தி ல் நான்கு குழிகளில் இருந்து 54 முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதில் ஒருசில முதுமக்கள் தாழிகள் தவிர மற்றவை சேதமடைந்த நிலையிலேயே கிடைத்தன. சேதமடையாத தாழிகளில் உள்ள பொருட்களை ஆய்விற்கு உட்படுத்தினால் மட்டுமே மரபணு சோதனை முடிவுகள் தெளிவாக கிடைக்கும், எனவே சேதமடையாத தாழிகளை கணக்கிட்டு இன்று மாலை அதனை திறக்க தொல்லியல் துறை முடிவு செய்தது. தமிழக தொல்லியல் துறை ஆணையாளர்(பொறுப்பு) சிவானந்தம், இணை இயக்குனர் (கீழடி அகழாய்வு) ரமேஷ், மதுரை காமராசர் பல்கலை கழக மரபணு பிரிவு பேராசிரியர் குமரேசன் உள்ளிட்டோர் முன்னிலையில் 114வது தாழி திறக்கப்பட்டது. மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த தாழியின் மேற்பகுதி திறக்கப்பட்டு உள்ளே உள்ள பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன. 

மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், உணவு குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 20 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன.இவற்றை மரபணு பரிசோதனைக்காக எடுத்து செல்லப்படுகிறது. ஆய்வு பணிகள் குறித்து பேராசிரியர் குமரேசன் கூறுகையில் 6 மற்றும் 7 ம் கட்ட அகழாய்வில் மதுரை காமராசர் பல்கலை கழக மரபணு பிரிவும்இணைந்து செயல்படுகிறது. அமெரிக்கா ஹார்வார்டு பல்கலைகழக பேராசிரியர் டேவிட், சிகாகோ பல்கலைகழக பேராசிரியை மானஸா உள்ளிட்டோரின் நேரடி கண்காணிப்பில் ஆய்வுபணிகள் நடந்து வருகின்றன.