என்.எல்.சி. கேண்டீனில் வழங்கப்பட்ட உணவில் செத்த எலி? - 22 பேருக்கு வாந்தி, மயக்கம்

 
NLC

நெய்வேலி என்எல்சி தொழிற்சாலையில் உள்ள கேன்டீனில் உணவு சாப்பிட்ட 22 தொழிலாளர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைப் பார்த்து வருகின்றனர். அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அங்குள்ள கேண்டினில் இருந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  என்எல்சி கேன்டீனில் சுரங்கத்தொழிலாளர்கள் வழக்கம் போல் உணவு அருந்தினர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 22 பேர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுரங்கத்தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. உணவில் எலி கிடந்ததாக வெளியான புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நெய்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.