பைக்கில் பதுங்கி இருந்த பாம்பு கடித்து 21 வயது இளைஞர் பலி

 
ச்

தேனி மாவட்டம் கம்பம் அருகே இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு கடித்து, 21 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயதான இளைஞர் ஹரிகிருஷ்ணன். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகின்றார். ஹரிகிருஷ்ணன் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் நண்பர் ராம்குமாருடன் ஒன்றாக சுருளிப்பட்டி மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தின் முன்புற டூமில் (முகப்பு லைட்டில்) இருந்து திடீரென பாம்பு ஒன்று வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தை நிறுத்த ஹரிகிருஷ்ணன் பிரேக் பிடித்த போது இடது கை மணிக்கட்டில் பாம்பு கடித்ததாக உடனிருந்த நண்பர் ராம்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக மீட்கப்பட்ட ஹரிகிருஷ்ணன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் ஹரிகிருஷ்ணன் மயக்க நிலையில் இருந்தால் அவரது குடும்பத்தினர் மீண்டும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுகுடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக ஹரிகிருஷ்ணனின் தந்தை சிவக்குமார் புகாரில் இராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.