2026 தேர்தல் முடிவுகள் இது தான் : நியூஸ் ஹெட்லைன்ஸ் என்னனா - “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது - முதல்வர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் SIR எனப்படும் இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், ” S.I.R. எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட – ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட – என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில் செயல்படுத்துவதற்காக “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையை அடுத்த மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் (Confluence Hall)ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தற்போது இந்த வாக்கு சாவடி பயிற்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநகர – ஒன்றிய – நகர – பகுதி -பேரூர்க் கழகச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பயிற்சிக் கூட்டத்திற்குப் பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் குழு, பாக டிஜிட்டல் ஏஜென்ட், பாக இளைஞரணி, பாக மகளிரணி, கிளை மற்றும் வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ நிகழ்ச்சி நடை பெற உள்ளது
தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்க் கட்சிகள் பலவீனமாக உள்ள நிலையில் மிகத் தீவிரமான உறுதியான நடவடிக்கைகளால் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக உள்ளது திமுக.இந்தப் புதிய முன்னெடுப்பின் மூலம் நான்காண்டு காலத் திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டிலும் எடுத்துச் சொல்லி, மாநில அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பெற்ற பயன்களை உறுதிசெய்ய இருக்கிறார்கள், தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் துரோகத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க இருக்கிறார்கள்.வாக்குச் சாவடி அளவில் மக்களைச் சந்திக்கும் இந்த முன்னெடுப்பின் மூலம் மக்களுடனான தொடர்பை மேலும் அதிகப்படுத்திக் கொள்ள இருக்கிறது.
இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒவ்வொரு 100 வாக்குகளுக்கும் ஒருவர் என 6 லட்சம் பூத் கமிட்டியினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.
மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பரப்புரை நடைபெறும் நாள் குறித்த விவரங்களை பகுதி/நகர/ஒன்றிய/பேரூர் கழகச் செயலாளர்கள் முன்பே அறிவித்து, அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட BLA2,BDA, அனைத்து BLC மற்றும் வாக்குசாவடிக்குட்பட்ட மாநில-மாவட்ட- ஒன்றிய-பகுதி-நகர-பேரூர்-வார்டு-கிளைக் கழக நிர்வாகிகள்-சார்பு அணியினர் அனைவரையும் தனித்தனியாக கட்டாயம் அழைத்திட வேண்டும் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இங்க உட்கார்ந்திருக்க உங்க மனசுல, இப்போ என்ன ஓடிட்டு இருக்குனு, எனக்கு நல்லா தெரியுது… என்னடா, தலைவரும் சும்மா இருக்க மாட்றாரு.. நம்மையும் சும்மா இருக்க விடமாட்றாருனு சிலர் நினைப்பீங்க… சுணங்கி சும்மா இருந்துட்டா, நாம ஒரே இடத்துல தேங்கிடுவோம்! அது தேக்கம்! உழைப்பைக் கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கிட்டே இருக்கணும்! அதுதான் இயக்கம்!
எப்போதும் மக்கள் கூடவே இருந்து பணியாற்றும் உங்களுக்கு, இந்த பயிற்சிக் கூட்டம் என்பது, எக்ஸாம்க்கு பிரிப்பேர் ஆகுற ஸ்டூடண்ட், எல்லாத்தையும் படிச்ச பிறகு, மீண்டும் ஒருவாட்டி ரிவிஷன் பண்ணுவாங்கள்ல அப்படி, எலக்ஷன் எனும் எக்ஸாம் முன்னாடி நாம் பண்ற ரிவிஷன்தான், இந்தப் பயிற்சிக் கூட்டம்.நம்மோட இயக்கம் எந்நாளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதற்கு அடித்தளமான உங்களை நம்பி, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கோம்! உங்களோட உழைப்பால, ஆறாவது முறையா ஆட்சிப் பொறுப்புல இருக்குற நாம, அடுத்து ஏழாவது முறையாவும் ஆட்சி அமைக்கணும்! அதுக்குத்தான் இந்தப் பயிற்சிக் கூட்டம்!
2019-ஆம் ஆண்டு முதல், நாம் எதிர்கொண்ட அத்தனை தேர்தல்கள்லயும், மகத்தான வெற்றிகளை பெற்று வர்றோம்! நம்மோட வெற்றிகள், நம்ம எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கு! 2026 தேர்தல்லயும் நாமதான் வெற்றிபெற போறோம்… அன்னைக்கு நியூஸ் ஹெட்லைன்ஸ் என்னனா - “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது!” இதுதான் ஹெட்லைன்ஸ்! இதை நான் ஆணவத்துல சொல்லல! உங்க உழைப்பு மேலயும் - ஆட்சியின் சாதனைகள் மேலயும் - தமிழ்நாட்டு மக்கள் மேலயும் வெச்சிருக்க நம்பிக்கைல சொல்றேன்!
நம்ம திராவிட மாடல் அரசோட திட்டங்களும் - சாதனைகளும், கோடிக்கணக்கான மக்களோட உள்ளங்கள்லயும் இல்லங்கள்லயும் போய் சேர்ந்திருக்கு! லட்சக்கணக்கான இளைஞர்களோட வாழ்க்கையில ஏற்றத்தையும் – தொழில்துறையில மிகப்பெரிய பாய்ச்சலையும் – கல்வித் துறையில முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியிருக்க நம்மோட திட்டங்களும் சாதனைகளும்தான் திராவிட மாடலின் அடையாளம்! இந்தியாவுல எந்த மாநில அரசும் நம்மளவுக்கு சாதனைகள் செஞ்சிருக்க மாட்டாங்க! மீதமிருக்கும் சில வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேத்தி தருவோம்.நம்ம அரசு செஞ்ச சாதனைகளாலதான் நம்மால தைரியமா எல்லார் வீட்டுக்கும் போய், ஆதரவு கேட்க முடியுது!
ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு செஞ்சிட்டு இருக்க துரோகங்களை - நிதி ஒதுக்கீடுகள்ல செஞ்சிட்டு இருக்குற வஞ்சகங்களை எடுத்துச் சொல்லி, தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்-னு தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு வீட்டுக்கும் போய் - இந்த மாபெரும் முன்னெடுப்ப வெற்றியடைய வெச்ச, கழகத்தின் ரத்த நாளங்களான உடன்பிறப்புகள் ஒவ்வொருத்தருக்கும், இந்த மேடையில இருந்து, என்னோட பாராட்டுகளை, இந்த சல்யூட் மூலமா சொல்லிக்குறேன்!
தந்தை பெரியாரும் – பேரறிஞர் அண்ணாவும் – முத்தமிழறிஞர் கலைஞரும் ஏற்படுத்துன சுயமரியாதை உணர்வாலதான், பா.ஜ.க.வோட பாசிச ஆட்சிக்கு அடிபணியாம – முதுகெலும்போட எதிர்த்து நிக்குறோம்! எதிர்த்து நிக்குறது மட்டுமில்ல; விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வெச்சது மாதிரியான பல போராட்டங்கள்ல வெற்றியும் பெற்றிருக்கோம்! இப்போ கூட, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரா – ஏழு மாநில முதலமைச்சர்களை ஒன்றிணைச்சோம்! அகில இந்திய மருத்துவப் படிப்பு ஒதுக்கீட்டுல – பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைக்காக போராடி வாதாடி வெற்றி பெற்றோம்! இதையெல்லாம் பார்த்துதான், பா.ஜ.க.வுக்கு நம்ம மேல கோபம் வருது. அதுனாலதான், பல்வேறு சூழ்ச்சிகள்ல அவங்க ஈடுபடுறாங்க!
இந்த நிலைமையிலதான் அடுத்தகட்டமா - நமக்கு காத்திருக்கும் பணிகள் என்ன - அதை எப்படியெல்லாம் செய்யணும், தலைமை முதல் தொண்டர்கள் வரை எப்படி ஒருங்கிணைந்து ஒரே இலக்கோட செயல்படணும்னு விவாதிச்சு, அதை களத்துல செயல்படுத்துறதுக்காக தான் - இந்த பயிற்சிக் கூட்டம்!
கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாவட்டத்துல தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநகர – ஒன்றிய – நகர – பகுதி - பேரூர் கழகச் செயலாளர்கள்-னு எல்லாரும் வந்திருக்கீங்க. உங்க எல்லாரையும் ஒன்னா பார்க்கும்போது - உங்கள் முகங்கள்ல நான் உதயசூரியனை பாக்குறேன். அதனைத் தமிழ்நாட்டு மக்களின் இதயசூரியனாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கு!
இந்த பயிற்சி கூட்டத்துக்குப் பிறகு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலயும், ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்க பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் குழு, பாக டிஜிட்டல் ஏஜென்ட், பாக இளைஞர் அணி, பாக மகளிரணி, பாகத்திற்குட்பட்ட கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ னு முன்னெடுக்கணும். மாநில நிர்வாகியா இருந்தாலும் கூட அவரவர் வாக்குச்சாவடியில வெற்றி பெறுவது இலக்கா இருக்கணும். நானே கூட என்னோட வாக்குச்சாவடில நடைபெறவுள்ள கூட்டத்துல பங்கேற்று, அங்க நம்மோட வெற்றிய உறுதிசெய்யிறதுக்கான பரப்புரையில ஈடுபடுவேன்.
ஒவ்வொரு ஒன்றிய – பகுதி - பேரூர் செயலாளரும், தனக்கு கீழ வர்ற ஒவ்வொரு பூத்துக்கும் தனித்தனி கூட்டங்களை தினமும் மாலை வேளையில நடத்தி ஆகணும். இந்த கூட்டங்கள்ல அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட சார்பு அணி நிர்வாகிகள்ல இருந்து, மாநில நிர்வாகிகள் வரை எல்லா நிர்வாகிகளும், தவறாம கலந்துக்கணும். இந்த கூட்டங்கள்ல, ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு டார்கெட்டை செட் பண்ணிக்கணும்.
இப்படி, பூத்வாரியா நடத்துற கூட்டங்கள் – அதுல நீங்க நிர்ணயிச்சிருக்க இலக்கு – இப்படி எல்லா தகவல்களும் அடங்குன ஷீட்டை மாவட்டச் செயலாளர் மூலமா எனக்கு அனுப்பி வெக்கணும். வாராவாரம் நீங்க அனுப்புறத பார்த்துட்டு, நானே உங்களுக்கு போன் பண்ணி விசாரிப்பேன் என்பதை மறந்துடாதீங்க.
2026-ல நடக்க இருக்க ஜனநாயகத் தேர்தல் - தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்குற தேர்தல்! தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்குற நம்மோட ஆட்சியா, டெல்லிக்கு வளைந்து கொடுக்குற அடிமைகளின் ஆட்சியானு தீர்மானிக்குற தேர்தல்! தமிழ்நாட்டோட சுயமரியாதையையும் – தனித்தன்மையையும் காப்பாத்தப்போற தேர்தல்!
தமிழ்நாட்டை அழிக்க - இன எதிரிகளும் தமிழ்த் துரோகிகளும் நேரடியாவும் மறைமுகமாவும் வர்றாங்க. இவங்கள வீழ்த்தி - நம்மோட மண் – மொழி – மானத்தை காக்கணும். அதுக்காகத்தான் திமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியாகணும்னு தொடர்ந்து சொல்லிட்டு இருக்கேன்.
தமிழ்நாடு இப்போ சமூக, அரசியல், பொருளாதார படையெடுப்பை சந்திச்சு வருது. தமிழ்நாட்டுக்கு எல்லா வகையிலும் அநீதி இழைக்கப்படுது. இந்தியின் பேரால் - சமஸ்கிருதத்தின் பேரால் - ஜி.எஸ்.டி.யின் பேரால் - புதிய கல்விக் கொள்கையால் - நீட் தேர்வால் - சட்டங்களால் - உத்தரவுகளால் - ஆளுநரால் என தொல்லை மேல் தொல்லை கொடுக்குறாங்க. இது தமிழ்நாட்டு மேல தொடுக்கப்படும் தாக்குதல். இந்த தாக்குதல முறியடிக்குற வல்லமை நமக்குதான் இருக்கு!
பா.ஜ.க.வின் பகல்கனவு தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும்வரை நிறைவேறாது. அவங்களுக்கும் அது நல்லா தெரியும். ஆனாலும், புதுசு புதுசா குறுக்குவழிகளைத் தேடுறாங்க.
உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமா, வாக்காளர் பட்டியல்ல இருந்து நீக்கிட்டா பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றிபெற்றுடலாம்-னு கணக்கு போடுறாங்க. அதாவது, நேரடியா தேர்தல் களத்துல மக்களைச் சந்திக்குற தெம்போ திராணியோ இல்லாதவங்க, மக்களோட வாக்குரிமைய பறிச்சிட்டு வெற்றி பெறலாம்-னு தப்புக் கணக்கு போடுறாங்க.
S.I.R. முறைய கைவிடணும் என்பதையும் – வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்தணும்-னா அதுக்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்கணும் என்பதையும் – இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாவே தி.மு.கழகம் வலியுறுத்தி இருக்கு. அதையும் மீறி முன்னெடுக்கப்படுற ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்டரீதியா எதிர்கொள்வது மட்டுமில்ல, மக்களோட நின்னு களத்துலயும் எதிர்கொள்ளுற வலிமை நமக்கு உண்டு, இன்னும் சொல்லப்போனா, நமக்கு மட்டும்தான் உண்டு!
மக்களின் வாக்குரிமையையே பறிக்கத் துணியுற S.I.R. செயல்பாட்ட விழிப்போட கண்காணிக்கணும். உண்மையான வாக்காளர் எல்லாரும், வாக்காளர் பட்டியல்ல இடம்பெறணும். அத உறுதி செய்ய வேண்டியது உங்களோட பொறுப்பு.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தன்னோட சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.கிட்ட அடகு வெச்சிட்ட நிலையில, மக்களோட உரிமைகளைப் பத்தி கவலைப்பட அதுக்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலயும் மக்களின் உரிமைகளை காக்க வேண்டியவர்கள் தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும்தான் என்பதை மீண்டும் நினைவூட்டுறேன். மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்குற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில ‘தமிழ்நாடு தலைகுனியாது’-னு நான் உறுதி அளிக்கிறேன். தலைகுனிய விடமாட்டார்கள் கழக உடன்பிறப்புகள்-னு அதன் தலைவர் என்ற முறையில உறுதி ஏற்கிறேன்.
2021 தேர்தல் தமிழ்நாட்டை கொத்தடிமை அதிமுக கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜக - அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை - வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாகணும்.
எதிர்க்கட்சித் தலைவரா இருக்குற பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியா இருந்த – அந்தக் கட்சியை, அமித்ஷாகிட்ட விழுந்து சரண்டர் பண்ணிட்டாரு. அந்தக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பல; அவங்க கட்சிக்காரங்களும் விரும்பல! மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு போகல! வி.சி.க. வர்றாங்க – கம்யூனிஸ்ட்டுகள் வர்றாங்க – காங்கிரஸ் வர்றாங்கனு அவரும் தினமும் சொல்லி பார்த்தார்.. ஆனா யாரும் அங்க போகல… மக்களும் அவர் பேசுறத நம்பத் தயாரா இல்ல!
தமிழ்நாட்டுக்கு எதிரா கூட்டணி அமைச்சிருக்க அவரோட சந்தர்ப்பவாதத்தை மக்கள்கிட்ட எடுத்துச் சொல்லி, அவங்களோட நம்பிக்கையை பெற்று – அதை நம்ம கூட்டணிக்கான வாக்குகளா மாத்தணும்! அந்த கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கு.
இவ்வாறு கூறினார்
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’
— Top Tamil News (@toptamilnews) October 28, 2025
திமுக நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!#DMK #MKStalin #Mahabalipuram #என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி pic.twitter.com/T890qrcv4G
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’
— Top Tamil News (@toptamilnews) October 28, 2025
திமுக நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!#DMK #MKStalin #Mahabalipuram #என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி pic.twitter.com/T890qrcv4G


