2023-24 ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை - பொதுமக்கள் இப்படி கருத்து தெரிவிக்கலாம்..

 
வேளாண் நிதிநிலை அறிக்கை


தமிழக அரசின் 2023-24 ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்க பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிப்பதற்கு முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தமிழக வேளாண் பட்ஜெட்

முதல்வரின் அறிவுரைக்கேற்ப,  ஜன.22 திண்டுக்கல் மாவட்டத்தில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், திண்டுக்கல், கரூர், தேனி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள், சங்கப்பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். தொடர்ந்து, 24.01.2023 அன்று திருநெல்வேலியிலும், 28.01.2023 அன்று சிவகங்கையிலும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதுபோன்று, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறியும் வகையில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் விரைவில் நடத்தப்படவுள்ளன.

 அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

இதுமட்டுமல்லாது, காணொலிக் காட்சிகள் மூலமாகவும், அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்துள்ள மக்களிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்கு வேளாண்மை (ம) உழவர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாட்களில் விவசாயிகள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாத மக்களும் தங்களின் கருத்துக்களை உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம்.

கடிதம் மூலம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர், வேளாண்மை (ம) உழவர் நலத்துறை, தலைமைச் செயலகம், புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600 009 என்று முகவரியில் தெரிவிக்கலாம். tnfarmersbudget@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும், 9363440360 என்ற வாட்ச் ஆப் எண் மூலம் கருத்துகளை தெரிவிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.