பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல் - பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கருணாபுரம் கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலில் எடுத்து மாதேஷை விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இயங்காத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாகவும், பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். நேரில் வந்து விசாரித்த சிபிசிஐடி பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.