20கிராமங்கள் -10 ஆயிரம் ஆண்கள் - மெகா கறி விருந்து
20 கிராமங்களைச் சேர்ந்த பத்தாயிரம் ஆண்கள் கலந்து கொண்ட மெகா கறி விருந்து மதுரை மாவட்டத்தில் நடந்திருக்கிறது. இதற்காக 65 ஆடுகள் வெட்டி விருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை திருமங்கலத்தில் கரடிக்கல் கிராமம். இக்கிராமத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கறி விருந்து திருவிழா நடந்துள்ளது. இந்த கறி விருந்து திருவிழாவில் 20 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் ஆண்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். கரடிக்கல் கிராமத்தில் பாறை கருப்பசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் கிடாவெட்டி இப்படி சாமி கும்பிடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இரவு நேரத்தில் கிடாவெட்டி அதிகாலையில் சுற்று வட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம ஆண்கள் மட்டும் இந்த கறிவிருந்தில் கலந்து கொள்கிறார்கள். ஆண்கள் மட்டுமே இந்த கறி விருந்து சாப்பிடுகிறார்கள். பெண்கள் இந்த கறி விருந்தில் பங்கேற்பதில்லை. அவர்களும் சாப்பிடவும் கூடாது என்கிறார்கள். ஆனால் ஆண்கள் சாப்பிடும் இலையை எடுப்பதற்கு மட்டுமே பெண்கள் வருகிறார்கள்.
ஆனால் சிலரோ, இங்கு சாப்பிடப்படும் இலையை யாரும் எடுப்பதில்லை. அதுவே தானாக காற்றில் பறந்து மறைந்து விடும் . அதுவரை இந்த பகுதிகளில் எந்த பெண்களும் வர மாட்டார்கள் என்று கூறுகின்றார். பல நூறு ஆண்டுகளாக இந்த திருவிழா தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது என்கிறார்கள்.