யூடியூபர் முக்தார் மீது மேலும் 20 புகார்கள்; போலீஸ் அறிக்கை..!
பிரபல கார் பந்தய வீராங்கனையும், பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளருமான அலிஷா அப்துல்லா, கடந்த ஜூன் 3, 2026 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் கண்ணீர் மல்க புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், "MY INDIA 24x7" என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட காணொலியில், தன்னைப் பற்றியும், தனக்குப் புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் குறித்தும் மிகவும் ஆபாசமான, இழிவான மற்றும் பாலியல் ரீதியான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். பெண்களின் கண்ணியத்திற்கும் தனிமனித உரிமைக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவின் (CCB) சைபர் குற்ற காவல் நிலையத்தின் சமூக ஊடக விசாரணைப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த வழக்கில் தொடர்புடைய முதன்மை குற்றச்சாட்டிற்கு உள்ளான பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா (வயது 33) (திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன்) கடந்த ஜூன் 4, 2026 அன்று போலீஸாரால் திருச்சியில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த அகமது பாஷாவின் மகனான யூடியூபர் முக்தார் அகமது (வயது 48) போலீஸாருக்குப் பயந்து அண்டை மாநிலத்திற்குத் தப்பி ஓடித் தலைமறைவானார்.
தலைமறைவாக இருந்த முக்தாரைப் பிடிக்கச் சென்னை சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம், மாண்டியாவில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை போலீஸார், ஜூன் 9 அன்று முக்தார் அகமதுவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, நேற்று (ஜூன் 10, 2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்தார் அகமது கைது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:
கைது செய்யப்பட்டுள்ள முக்தார் அகமது மீது ஏற்கனவே வெவ்வேறு காவல் நிலையங்களில் 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
யூடியூப் மற்றும் சமூக ஊடக தளம் மூலமாகத் தொடர்ந்து பலதரப்பட்ட பெண்களை இலக்கு வைத்து, அவர்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையில் அவதூறுகளைப் பரப்புவதையே இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் காரணமாக, பொதுமக்களிடமிருந்து இவர் மீது மேலும் 20-க்கும் மேற்பட்ட புகார்கள் சென்னை காவல் துறையிடம் வரப்பெற்று தற்பொழுது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அடுக்கடுக்கான புகார்களின் அடிப்படையில், முக்தார் அகமது மீது மேலும் பல புதிய வழக்குகள் பதியப்பட்டு, அவரைத் தொடர்ந்து சிறையில் அடைக்கக் காவல் துறை திட்டமிட்டுள்ளது.
சமூக ஊடகங்களைச் தவறாகப் பயன்படுத்துவோர் குறித்துச் சென்னை பெருநகர காவல் ஆணையர் விடுத்துள்ள எச்சரிக்கையில்:
"சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் பெண்களை அவமதிக்கும் வகையிலான ஆபாச, இழிவான அல்லது சட்டவிரோத உள்ளடக்கங்களை (Contents) வெளியிடுவது கடுமையான பிணையில்லா குற்றமாகும். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வரம்பு மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி மிகக் கடுமையான ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கைகள் பாயும்" எனக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

