டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு 20% போனஸ்
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024-25 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை (Ex-Gratia) 2025 -2026 ல் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் (C மற்றும் D) பிரிவு ஊழியர்கள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்கள் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணை தொகை தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு வழங்கப்படும்.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் பணிபுரியும் 24816 தகுதியுடைய நபர்களுக்கு ரூ.40,62 கோடி செலவில் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை உறுதி செய்திட வழிவகை செய்யும்.


