ஆலங்குளத்தில் இரண்டரை வயது சிறுமி அடித்துக் கொலையா? பகீர் பின்னணி
ஆலங்குளத்தில் இரண்டரை வயது சிறுமி அடித்துக் கொலையா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையை மறந்து தலைமறைவான கல்நெஞ்சம் கொண்ட பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற திலீப் குமார், ஹேமலதா ஆகியோர் ஹாசினி என்ற இரண்டரை வயது குழந்தையுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆலங்குளம் அண்ணாநகர் மூன்றாவது தெரு 3-வது சந்து பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். சக்திவேல் காய்கனிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகவும் ஹேமலதா தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தனியார் ஜவுளிக் கடையிலும் வேலை செய்து வந்தனர். குழந்தை ஹாசினி 6 மாதங்களிலிலேயே இப்பகுதியில் வசிப்பவர்களை தனது மழலைக் குரலால் பேசி தன் பக்கம் ஈர்த்தார். அக்கம் பக்கத்தினரும் குழந்தையிடம் மிகவும் அன்பாக நடந்தனர். அத்தெருவில் வசிப்பவர்களுக்கு செல்லப்பிள்ளையாகவே மாறிப்போனார் ஹாசினி.
இந்நிலையில் குழந்தை ஹாசினி கடந்த டிச. 31 ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததாகக் கூறி ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். குழந்தை சுய நினைவின்றி காணப்பட்டதால் அங்கு முதலுதவிக்குப் பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 4 தினங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பெற்றோர் இருவரும் மருத்துவமனையில் குழந்தையுடன் இருந்த நிலையில், திடீரென யாரிடமும் சொல்லாமல், போலீசாரிடமும் தகவல் தெரிவிக்காமல் தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் அந்த குழந்தை இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து இது உண்மையிலேயே இவர்களின் குழந்தை தானா? இவர்கள் அளித்த பெயர் விவரங்கள் உண்மைதானா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவர்களைத் தேடி வருகின்றனர்.